சகலகலாவல்லிமாலை

17 ஆம் நூற்றாண்டில் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் “ஸ்ரீவைகுண்டம்” எனும் ஊரில் பிறந்தவர்தான் “குமரகுருபரர்”. இவர் பிறந்து ஐந்து வயதாகும் வரை பேசும் திறனற்று இருந்ததால் வேதனையுற்ற இவரது பெற்றோர் இவரை திருச்செந்தூர் சென்று அங்கு கோவில் கொண்டிருக்கும் செந்திலாண்டவரை வணங்கினர். அவரின் அருளாற்றலால் சில தினத்திலேயே பேச ஆரம்பித்ததோடு மட்டுமில்லாமல், கவித்திறத்துடன் பாடல்களை பாடும் வரத்தையும் பெற்றார் குமரகுருபரர். இவரது திறமையை அறிந்த மதுரையை ஆண்ட நாயக்க மன்னன் தனது அரசவைக்கு அழைத்தார். அதன் பேரில் அங்கு சென்ற குமரகுருபரர் அங்கு சிறந்த தமிழ் பாடலை பாடி அந்த மன்னனால் பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டார். ஞானத்தேடலில் அதிகம் ஈடுபட்டிருந்த குமரகுருபரர் பாரதம் எங்கும் பயணம் செய்தார். அப்போது அவர் காசி நகருக்கு சென்றிருந்த சமயம் அந்த புனிதமான காசி நகரத்தின் சிவன் கோவிலும், அதன் சம்பிரதாயம் மற்றும் இந்து மதமே முகலாயர்களின் அடக்குமுறையால் மிகவும் ஷீணமடைந்திருந்தது. இந்த நிலையை மாற்ற நினைத்த குமரகுருபரர் அந்த முகலாய மன்னனிடம் தாம் பேசி சைவ மதத்தை மீட்க விரும்பினார். ஆனால் அவர்களிடம் பேச அவர்களின் இந்துஸ்தானி மொழி தமக்கு தெரியாததை குறித்து வருந்தினார். உடனே தான் வணங்கும் “சரஸ்வதி” தேவியை வணங்கி “சகலகலா வல்லி மாலை” எனும் பாடல் தொகுப்பை பாட அந்த தேவியின் அருளால் வடமொழியில் பேசும் திறன் பெற்றார்.


குமரகுருபரர் அருளிய 
சகலகலாவல்லிமாலை 

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

பஞ்சப் பிதந்தரு செய்ய பொற்பாதம் பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராது என்னே நெடுந்தாட் கமலத்
தஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவு மகமும் வெள்ளைக்
கஞ்சத்தவி சொத்திருந்தாய் சகல கலாவல்லியே.

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்